Sunday, September 28, 2025

உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம்

  

உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் இன்று செப்டெம்பர் 28 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வருடத்துக்கான கருப்பொருளாக ‘டிஜிட்டல் யுகத்தில் சுற்றுச்சூழல் தகவல்களை அணுகுவதை உறுதி செய்தல் ‘ என்ற விடயத்தை யுனஸ்கோ அமைப்பு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பில் இரண்டு நாள் மாநாடு 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இடம்பெறுகின்றமை முக்கிய விடயம்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் கல்வி,அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO), செப்டம்பர் 28 ஆம் தேதியை சர்வதேச தகவல் அணுகல் தினமாக அறிவித்தது. உலகில் உள்ள பல சிவில் சமூக அமைப்புகளும் அரசு அமைப்புகளும் இதை ஏற்று தகவல் பெறும் உரிமையானது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு அம்சம் என பிரசாரங்களை மேற்கொண்டன. இதையடுத்து ஐ.நா. பொதுச் சபையானது செப்டம்பர் 28, 2019 அன்று இத்தினத்தை சர்வதேச தகவல் அணுகல் தினமாக ஏற்றுக்கொண்டது.

தகவல்களை பெறுவது மனித உரிமைகளில் ஒன்று என்ற அடிப்படையில் இன்று உலகளாவிய ரீதியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதில் வெகுஜன ஊடகங்கள் பிரதான இடத்தை வகித்தாலும் நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு தனிநபரும் தமக்கு தேவையான தகவல்களை சட்டரீதியாகப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை அபிவிருத்தியடைந்த நாடுகள் செய்து வருகின்றன.

டிஜிட்டல் உலகில் உடனுக்குடன் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதென்பது சவாலான விடயம் என்றாலும் இவ்வருடத்தின் கருப்பொருள்., சரியான தகவல்களை சரியான நேரத்தில் எல்லைகளை தாண்டி அணுகும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது.

காலநிலை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பல்லுயிர் மற்றும் பேரிடர் அபாயங்களை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் தரவுகள் என்பன தேசிய எல்லைகளை கடந்து, வெளிப்படையான மற்றும் உலகளாவிய தகவல் பகிர்வை அவசியமாக்குகிறது.

காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் பேரழிவின் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தகவலுக்கான அணுகல் மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் திறந்த தரவு தளங்கள் எவ்வாறு பொது அணுகலை மேம்படுத்துகின்றன,

வெளிப்படைத்தன்மையை வளர்க்கின்றன, மேலும் குடிமக்கள் மற்றும் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு , சுற்றுச்சூழல் நிர்வாகம் மற்றும் அதன் நிலையான வளர்ச்சியில் பங்கேற்க எவ்வாறு அதிகாரம் அளிக்கப்படுகின்றன என்பதை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.

உலக நாடுகளில் சட்டரீதியாக தகவல்களை அணுகுவதற்கு தகவல் அறியும் சட்டமூலமே ஒரு கருவியாக உள்ளது. ஆனால் அப்பொறிமுறை ஆட்சியாளர்களால் சரியாக முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றன. தென்னாசியாவில் 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டு வந்த நாடாக இலங்கை உள்ளது. 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு பொதுமக்கள் தகவல்களை அறியும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டாலும் கூட, இன்னும் இச்சட்டம் குறித்த தெளிவு பெரும்பான்மையான மக்களை சென்றடையவில்லையென்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இதன் காரணமாக கூடுதலாக ஊடகவியலாளர்களே இச்சட்டத்தைப் பயன்படுத்தி பல சவால்களுக்கு மத்தியில் தகவல்களைப் பெற்று அவற்றை ஊடகங்கள் வாயிலாக (பெரும்பாலும் அச்சு ஊடகங்கள் வாயிலாக) மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.

தகவல்களை அணுகி அவற்றை அறிந்து கொள்ளும் பொறிமுறையானது ஒரு நாட்டில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு மக்களை வழிப்படுத்தும் வலிமை கொண்டது என யுனஸ்கோ கூறுகின்றது. தகவல்களை அணுகுதல் தொடர்பான சட்டங்களை ஏற்றுக்கொள்ளுல் , அதை செயற்படுத்தல் தொடர்பாக முன்னேற்ற அறிக்கைகளை மற்றும் தரவுகள் இவற்றை நிரூபித்துள்ளன.

தகவல்களை அறிந்த குடிமக்கள், உதாரணமாக தேர்தல் காலத்தில் வாக்களிக்கச் செல்லும் போது சில முடிவுகளை எடுக்க முடியும். குடிமக்கள் தாங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தால் மட்டுமே, அவர்கள் தங்கள் ஆட்சியாளர்களை தங்கள் முடிவுகள் மற்றும் செயல்களுக்குப் பொறுப்பேற்க வைக்க முடியும். தகவல் என்பது ஒரு சக்தி. எனவே, தகவலுக்கான உலகளாவிய அணுகல் என்பது ஆரோக்கியமான , அறிவார்ந்த சமூகங்களின் ஒரு ஆதாரம் என யுனஸ்கோ அமைப்பு இவ்வருட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தகவலுக்கான உலகளாவிய அணுகல் என்பது அனைவருக்கும் தகவல்களைத் தேட, பெற மற்றும் வழங்க உரிமை உள்ளது என்பதாகும். இந்த உரிமை கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆர்வமுள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல்களைத் தெரிவிப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே, தகவல்களை அணுகுவதற்கான உலகளாவிய உரிமையும் பத்திரிகை சுதந்திரத்திற்கான உரிமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என யுன்ஸ்கோ மேலும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலமானது ஊடகவியலாளர்கள் , ஊடக அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரம் பயன்படுத்த கூடியதாக அல்லாது அனைத்து மக்களிடமும் சென்றடையும் பொறிமுறையை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும். மேலும் தகவல் அறியும் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்குவதற்குரிய வழிவகைகளையும் வளங்களையும் ஏற்படுத்தி கொடுத்தல் அவசியம். ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு எட்டு வருடங்களையும் கடந்தும் நிரந்தரமான ஒரு அலுவலகம் இன்றி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு அறைகளில் ஆணைக்குழு இயங்கி வருவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மேலும் ஊடக அமைச்சின் கீழ் ஆணைக்குழு இயங்குவதும் அதன் சுயாதீன தன்மையை பாதிப்பதாக சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் தகவல்களைப் வழங்குவதற்கு இலங்கையிலுள்ள பொது நிறுவனங்கள் இன்னும் தயாராக இல்லை. முதலாம் உலக நாடுகளில் உள்ள அரச நிறுவனங்களில் எத்தருணத்திலும் தகவல்களைப்பெறத்தக்கதாக டிஜிட்டல் முறையிலான வசதிகள் உள்ளன. அங்கு தகவல் அறியும் சட்டமூலம் இருந்தாலும் கூட எவரும் விண்ணப்பித்து பெறக் கூடிய அவசியம் இல்லை.

மக்களுக்கு தேயைான தகவல்கள் , தரவுகள் டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.தகவல்களைப் பெறுதல் என்பது ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் அதே வேளை எதிர்காலத்தில் மோசடிகளை கட்டுப்படுத்தும் எனலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஊழல் ,மோசடிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்துள்ளோம் என்கிறது. அவ்வாறாயின் பொது நிறுவனங்களில் இடம்பெறும் அல்லது இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்துவதற்கு தகவல் அறியும் சட்டமூலத்தை பயன்படுத்தத் தக்க அப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் அனைத்து பிரஜைகளும் ,பொது நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை கொண்டவர்களாவர். அவற்றை உறுதி செய்வதற்கு தற்போதய அரசாங்கம் தகவல் அறியும் சட்டமூலத்தை அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கும் அதே வேளை தகவல் அறியும் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மையை உறுதிசெய்ய வேண்டும்.

Monday, September 15, 2025

நூறு வருட தண்டவாளங்களும் இருநூறு வருட வாழ்க்கையும்..!


கண்டியிலிருந்து பதுளை வரையிலான இரயில் மார்க்கத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பொருத்தப்பட்ட பழைய தண்டவாளங்களை அகற்றி புதியனவற்றை பொருத்தும் பணிகளை புகையிரத திணைக்களத்தின் பாதை பராமரிப்பு பிரிவு கடந்த வாரம் ஆரம்பித்திருக்கின்றது.

குறித்த மார்க்கத்தில் புகையிரத சேவைகளை ஆரம்பித்தவர்கள் பிரிட்டிஷார். அதற்கான பிரதான காரணம் மலையகப் பகுதிகளில் விளையும் கோப்பி மற்றும் தேயிலையை ஏற்றுமதி செய்வதற்காக  கொழும்புக்கு கொண்டு செல்வதாகும். தமக்கு வருமானத்தை தரும் பெருந்தோட்டப் பயிர்களை அடிப்படையாகக்கொண்டே 1867 ஆம் ஆண்டு

கண்டியிலிருந்து பதுளை வரையிலான புகையிரத பாதையை உருவாக்க பிரிட்டிஷார் தீர்மானித்தனர். 1885 ஆம் ஆண்டு நானுஓயா வரை பணிகள் நிறைவடைந்திருந்தன. அங்கிருந்து நுவரெலியா இராகலை வழியாக உடபுசல்லாவை வரை ஒரு மார்க்கமும், பதுளை வரை ஒரு மார்க்கமுமாக பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 1894 ஆம் ஆண்டு பண்டாரவளை இரயில் நிலைய பணிகள் பூர்த்தியடைந்தன. அங்கிருந்து பதுளை வரையான புகையிரத பாதை பணிகள் நிறைவடைய 30 வருடங்கள் சென்றன. இவ்வாறு கண்டி –பதுளை புகையிரத பாதை பணிகள் 1924 ஆம் ஆண்டு முடிவுற்றன.

தற்போது நானுஓயா –உடபுசல்லாவை மார்க்கத்தில் புகையிரத மார்க்கம் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை. கண்டி –பதுளை மார்க்கத்தில் 1960 களில் புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன. அக்காலப்பகுதியில் தேயிலை தொழிற்றுறை உச்ச இடத்தில் இருந்தது. இம்மார்க்கத்தில் உள்ள பெருந்தோட்டங்களிலிருந்து பெறப்படும் தேயிலை (தூள்) பெட்டிகளில் அடைக்கப்பட்டு, புகையிரதம் மூலமே தலைநகருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சரக்கு புகையிரத சேவைகள் பிரத்தியேகமாக இயங்கின.

கண்டி –பதுளை புகையிரத மார்க்கத்தை உருவாக்க ஆங்கிலேயருக்கு 57 வருடங்கள் எடுத்தன. இது அக்காலத்தில் ஒரு சாதனையாகும். ஏனென்றால் இம்மார்க்கம் பல சிக்கலான மலைப்பிரதேசங்களையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டது. வீதியமைத்தல், தண்டவாளங்களைப் பொருத்துதல், சுரங்கங்கள் மற்றும் பாலங்களை அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டவர்கள் தென்னிந்திய கிராமங்களிலிருந்து ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களாவர்.

ஒரு தொகுதியினர் பெருந்தோட்டங்களை உருவாக்க இன்னுமொரு பிரிவின் போக்குவரத்து பாதைகளை உருவாக்கி தமது உழைப்பை நல்கினர். தற்போது சுமார் 65 வருடங்களுக்குப்பிறகு கண்டி –பதுளை புகையிரத மார்க்கத்தின் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியாளர்களினால் நாடெங்கினும் அதிவேக மார்க்கங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவர்கள் மலையக புகையிரத மார்க்கங்களையும் பிரிட்டிஷ் காலத்து இரயில் நிலையங்களையும் கண்டு கொள்ளவில்லை. அதே போன்று இம்மார்க்கத்தில் அமைந்துள்ள பெருந்தோட்டங்களில் பிரிட்டிஷார் அமைத்துக்கொடுத்த தொழிலாளர் குடியிருப்புகளையும் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதை கடந்து செல்கின்றதா என்று தான் கேட்க வேண்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்களுக்கு இது வரை எந்த திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு மாத்திரமே தற்போது சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு கெளரவமான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொடுப்போம் என ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் இப்போதைய ஜனாதிபதி அநுரகுமார நுவரெலியாவில் வைத்து தெரிவித்தார். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாகவுள்ள சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் என பாராளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் கூறினார். அவ்வாறான எந்த வாக்குறுதிகளும் இது வரை நிறைவேற்றப்படவில்லை.

நாட்டில் உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரிக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் அதிகம் விரும்பி பயணம் செய்யும் புகையிரத மார்க்கமாக கண்டி –பதுளை விளங்குகின்றது. இதனூடே புதிய இரயில்களை சேவைகளில் ஈடுபடுத்தி,உல்லாசப்பயணிகளுக்கு மேலதிக பயண அனுபவங்களை வழங்குவதற்கு தண்டவாளங்கள் மாற்றப்படுகின்றனவா என்று தெரியவில்லை. இயற்கை அழகுடன் கூடிய பெருந்தோட்டப்பகுதி தேயிலை மலைகள் உல்லாசப்பயணிகளை அதிகமாக ஈர்க்கும் பகுதிகளாகும். எனினும் இங்கு வாழ்ந்து வரும் மக்களின் துன்பங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்தாலும் அதை தமது சமூக ஊடகங்களுக்கு பயன்படுத்திக்கொள்பவர்களாகவே இப்போது உல்லாசப்பயணிகளும் விளங்குகின்றனர்.

தமது சமூக ஊடக பக்கங்களுக்கு சிறந்த கரு அல்லது உள்ளடக்கங்கள் (Content) உள்ள இடமாக சில வெளிநாட்டினருக்கு இ லங்கையின் மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் மாறிவிட்டனர்.


மலையக புகையிரத மார்க்கங்களில் நூறு வருடங்களுக்கு முன்பு பொருத்தப்பட்ட இரும்பு தண்டவாளங்களை மாற்றுவதற்கு முன்வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அப்பிரதேசங்களில் காணப்படும் நூறு வருடங்களுக்கு மேல் பழமையான தொழிலாளர் குடியிருப்புகள் பற்றி சிந்திக்கவில்லை. சகல அம்சங்களிலும் அமைப்பு மாற்றங்களே (System Change) தமது ஆட்சியின் பிரதான இலக்கு என்ற ஆரவாரத்துடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தேசிய வருமானத்தில் பங்களிப்பு செய்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எப்போது அமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது?

Tuesday, September 9, 2025

இணைய வழி பாலியல் வர்த்தகம் இலங்கையில் அதிகரிப்பு...!

 இலங்கையில் பல நூற்றுக்கணக்கான வலை தளங்கள் இதற்காக  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்களில் மறைமுகமாக வர்த்தக பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பக்கங்களை ஆரம்பித்து விட்டு பின்பு பாலியல் சேவைகளை வழங்கும் தொடர்புகளை உள்பெட்டியின் ஊடாக இதோடு சம்பந்தப்பட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலியல் தொழிலில் 18 வயது முதல் 27 வயது வரையான பெண்கள் ஈடுபடுத்தப்படுவதுடன் சிலர் தன்னிச்சையாகவே இதில் ஈடுபட்டு வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை மசாஜ் சேவைகள் என்ற பெயரிலும் இவ்வாறான பாலியல தொழில்கள் முன்னெடுக்கப்படுவதாக சைபர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தகத்தை முன்னெடுப்பது அவர்களுக்கு செலவு குறைவு மாத்திரமல்லாது சட்டத்தின் ஓட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

 

இலங்கையில் இணைய வழி பாலியல் வர்த்தகம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது நாட்டில் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் தமது பொருளாதார நெருக்கடிகளை நிர்வர்த்தி செய்து கொள்ள பல வயது குறைந்த பெண்கள் இதில் நாட்டம் காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பல நூற்றுக்கணக்கான வலை தளங்கள் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக ஊடகங்களில் மறைமுகமாக வர்த்தக பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பக்கங்களை ஆரம்பித்து விட்டு பின்பு பாலியல் சேவைகளை வழங்கும் தொடர்புகளை உள்பெட்டியின் ஊடாக இதோடு சம்பந்தப்பட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலியல் தொழிலில் 18 வயது முதல் 27 வயது வரையான பெண்கள் ஈடுபடுத்தப்படுவதுடன் சிலர் தன்னிச்சையாகவே இதில் ஈடுபட்டு வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை மசாஜ் சேவைகள் என்ற பெயரிலும் இவ்வாறான பாலியல தொழில்கள் முன்னெடுக்கப்படுவதாக சைபர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த வர்த்தகத்தை முன்னெடுப்பது அவர்களுக்கு செலவு குறைவு மாத்திரமல்லாது சட்டத்தின் ஓட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர். இணைய வழியாக பல பொருட்களை வர்த்தகம் செய்வோர் கூட மறைமுகமாக பாலியல் தொழிலை இதன் மூலம் ஊக்குவிப்பதோடு அதில் பங்குதாரர்களாகவும் உள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சில விசாரணைகளின் போது இவ்வாறு இயங்கும் வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் தம்மை வியக்க செய்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். சில பட்டியல்களில் சுமார் ரூ. 10,000 விலையில் "தாய்லாந்து முழு உடல் மசாஜ்  ரூ. 1,000 முதல் ரூ. 10 நிமிடங்கள் வரை நேரடி வீடியோ அமர்வுகள், 30 நிமிடங்களுக்கு 10,000 ரூபாய், மற்றும் நேரடியான சந்திப்புகளுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 30,000 வரை இங்கு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. தரகர்கள் மூலம் பாலியல் தொழிலை முன்னெடுத்த காலம் மலையேறி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது திறன்பேசியை இயக்கத் தெரிந்த எவருமே இப்போது தொடர்புகளை தனித்துவமாக பேணி வருகின்றனர். இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதை அவர்களே எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகை தரும் உல்லாசப்பயணிகளோடு பயணித்தல், தொடர்புகளை வைத்துக்கொள்ளல், அளவுளாவுதல் போன்ற செயற்பாடுகள் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவை. அதற்கு எவருக்குமே சுதந்திரம் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் தொழிலை வைத்து நிதி மோசடிகளும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து முறைப்பாடு செய்தால் சமூகத்தில் தமக்கு களங்கம் ஏற்படும் என்றும் ஏமாற்றியவர்கள் இதை பாலியல் தொழிலோடு சம்பந்தப்படுத்தி அவர்களை மாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதால் சில பெண்கள் அதை தவிர்க்கும் அதே வேளை பாரிய பண இழப்புகளுக்கும் முகம் கொடுப்பதாக தெரியவருகின்றது.

பொது வெளிப்பாடு அல்லது சமூக களங்கம் குறித்த பயத்தால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் யோசிக்கின்றனர். முறையான புகார்களைப் பதிவு செய்வதை இது தடுக்கிறது, இது சட்ட நடவடிக்கையை கடினமாக்குகிறது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பொருளாதார அழுத்தங்கள் பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடத் தூண்டியுள்ளன என்பது தெரியவந்தது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குறைந்து வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், ஆயிரக்கணக்கானோர் பிழைப்புக்கான ஒரு வழியாக டிஜிட்டல் பாலியல் வர்த்தகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது, சிலர் இந்த சேவைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுகின்றனர்.

இது குறித்து ஒரு சில முறைப்பாடுகளை மாத்திரமே தாம் பெறுவதாகக் கூறும் பொலிஸார் அண்மையில் இடம்பெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணைகள் பற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். கட்டிளம் பருவ ஆண்/பெண் இருபாலரையும் குறித்து வைத்து சிலர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அதாவது குறித்த பருவத்தினரை இலக்கு வைத்து பாலியல் வீடியோக்களை இணையத்தில் தரவேற்றம் செய்கின்றனர். அதை பார்வையிட ஒரு தொகை கட்டணம் இணைய வழியாகவே செலுத்தப்படல் வேண்டும். பாடசாலை செல்லும் மாணவர்களும் தற்போது கடன் அட்டைகளை கொண்டிருப்பதால் அவர்கள் தமது திறன்பேசி வழியாக அதை கண்டு களிக்கின்றனர்.

16 –-22 வயதுடைய பார்வையாளர்களை குறிவைத்து இணையத்தில் நேரடி பாலியல் வீடியோக்களை விநியோகித்ததாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினர் ஹொரணையில் அண்மையில் கைது செய்யப்பட்டனர். 23 வயதுடைய பெண் மற்றும் 25 வயதுடைய ஆண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்து வரும் இ ந்த சமூக சீர்கேடு குறித்து பொலிஸார் விழிப்புடன் இருப்பதாகவும், இந்த சேவைகள் பெரும்பாலும் 18 முதல் 27 வயதுடைய பெண்களையும் சில வயதுக்குட்பட்ட சிறுமிகளையும் உள்ளடக்கியதாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள் மூலம் பணம் செலுத்தி நட்புத் தேடல் என்ற பெயரில் பின்பு அது பாலியல் தொடர்பாக மாறுகின்றது என பொலிஸ் பேச்சாளர் எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களைத் தடுக்கவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் பொலிஸ் பிரிவினர் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்வதாக அவர் கூறினார்.

18 வயதுக்குட்பட்ட எவருடனும் உடலுறவு கொள்வது இலங்கை சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது, அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் கூறுகின்றது. ஆனால் பாடசாலை மாணவர்களையும் ஈர்க்கச் செய்து இதில் இணையச் செய்யும் பாரதூரமான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கை ஜனவரி 2024 இல் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இணையவழி உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதையும் இணையவழி துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தடைசெய்யப்பட்ட இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை உள்ளடக்கத்தை அகற்றவும் வழக்குத் தொடரவும் அதிகாரம் கொண்ட ஒரு இணயைய வழி பாதுகாப்பையே இது வலியுறுத்துகின்றது. ஆனால் இதை விரிவுபடுத்தி சட்டவிரோத இணைய வழி வர்த்தகங்களை தடை செய்யும் வழிகள் ஆராயப்படல் வேண்டும் என்று கூறப்படுகின்றது.

Tuesday, September 2, 2025

அட்டன் பஸ் நிலைய மலசல கூட பராமரிப்பு.....! கேள்வி அறிவித்தல் மூலம் வருடாந்தம் 99 இலட்சம் ரூபாய் வருமானம் சபை நிர்வாகத்தின் ஊடாக 36 இலட்சம் ரூபாய் நட்டம்

 தகவல் அறியும் சட்டமூலம்  ஊடாக  பெறப்பட்ட தகவல்கள் 



 


 

அட்டன் –டிக்கோயா நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அட்டன் பிரதான பஸ் நிலையத்தில் அமைந்துள்ள இரண்டு மலசல கூடங்களில் பிரதான மலசல கூடத்தின் மோசமான நிலைமைகள் குறித்து கடந்த காலங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் அட்டன் பிரதான பஸ் நிலையத்தின் மலசலகூடமானது மனிதர்கள் பாவிக்கும் நிலைமையில் இல்லையென அம்பகமுவ மாவட்ட சுகாதார வைத்தியர் அதிகாரி காரியாலயம், நோர்வூட் பிரதேச செயலகத்தின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியும் மலசலகூடத்தை சீர்செய்யும் பணிகளில் நகர சபை நிர்வாகம் கடந்த காலங்களில் ஆர்வம் காட்டவில்லை.

மிக முக்கியமாக 2023 ஆம் ஆண்டு மேற்படி நகரசபையானது மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் வந்த பிறகே சபையின் நிர்வாகத்தின் அட்டன் நகரில் இயங்கிய மலசல கூடங்கள் கவனிப்பாரற்று கைவிடப்பட்டன என்பதே நகர மக்களின் கருத்தாகும். நகர சபை செயலாளர் மற்றும் முகாமைத்துவ குழுவின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் நகர கழிவகற்றல் செயற்பாடுகளிலும் நகர சபையின் மலசலகூடங்களை பராமரித்தலிலும் தோல்வியைத் தழுவிய காலகட்டங்களாக விளங்குகின்றன.

இந்நிலையில் பஸ் நிலைய மலசலகூடத்தில் அதிக கட்டணங்கள் அறவிடப்படல், முறையான பராமரிப்பு இல்லாமை, தொடர்ச்சியாக எழுந்த முறைப்பாடுகளுக்கமைய தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக சில தகவல்களை பெற விழைந்தோம். அதன் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நகர சபை நிர்வாகம் உள்ளூராட்சி ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கு முன்பாக மேற்படி மலசல கூடமானது கேள்வி அறிவித்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பராமரிப்பு காலத்தில் பெற்ற வருமானத்தை விட, செயலாளரின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவால் மிகக் குறைந்த வருமானத்தைப் பெற்றிருப்பதுடன் வருமான நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கணக்கறிக்கை தெரிவிக்கின்றது.

அதே வேளை 2021 ஆம் ஆண்டு மேற்படி மலசலகூடங்களை பழுது பார்ப்பதற்காக மத்திய மாகாண சபையின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் கொவிட் நிலைமைகளை காரணம் காட்டி ஒப்பந்தக் காரர்கள் எவரும் இவ் வேலைத்திட்டத்துக்கு முன்வராத காரணத்தினால் அந்நிதியை பயன்படுத்த முடியாது போய் விட்டதாகவும் நகர சபை தெரிவித்துள்ளது. மேற்படி மலசலகூடங்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்ட கேள்விகளும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களும் இங்கு தரப்படுகின்றன.

1) அட்டன் டிக்கோயா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் நான்கு (4) மலசல கூடங்கள்இயங்கி வருகின்றன. இவற்றில் அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இயங்கும் மலசல கூடங்கள் இரண்டு (2) ஆகும்.

2) குறித்த பஸ் தரிப்பு நிலையங்களில் உள்ள மலசல கூடங்களை பராமரிப்பதற்கு2023 ஆம் ஆண்டு வரையே கேள்வி அறிவித்தல் மூலமாக குத்தகைக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அதன் பிறகு நகர சபை நிர்வாகத்தின் முகாமைத்துவ குழுவினரின் தீர்மானங்களின் படி குழுவொன்றை நியமித்து மலசல கூட பராமரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

வருமானம்

2023 ஆம் ஆண்டு கேள்வி அறிவித்தல் மூலமாக மேற்படி மலசல கூடங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டதில் அவ்வாண்டு வருமானமாக 99 இலட்சத்து 83 ஆயிரத்து 171 ரூபா 71 சதம் வருமானமாக கிடைத்துள்ளதாக நகரசபை பதில் வழங்கியுள்ளது. அதே வேளை 2023 ஆம் ஆண்டின் இறுதியில் கேள்வி அறிவித்தல் நடைமுறை மாற்றப்பட்டு நகர சபையின் முகாமைத்துவ குழுவால் 22/11/2023 அன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சபையால் நியமிக்கப்பட்ட நபர்களால் மேற்படி மலசல கூடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நட்டம்

இருப்பினும் மேற்படி மலசல கூட வருமானத்தில் நகரசபையால் முன்னைய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்பதை அறியக் கூடியதாக உள்ளது. அதாவது தற்போது நாள் ஒன்றுக்கு மேற்படி மலசல கூடங்களிலிருந்து சராசரியாக 19,500 ரூபாயே வருமானமாகக் கிடைப்பதாகவும் பயனாளி ஒருவரிடம் 30 ரூபாய் கட்டணம் நுழைவுச் சீட்டாக வழங்கப்படுவதாகவும் பதில் தரப்பட்டுள்ளது. இந்த மலசலகூடங்களை பராமரிக்க இருவர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 6 மணிக்கு திறக்கப்படும் மலசல கூடம் மாலை 6 மணிக்கு மூடப்படுகின்றது. இந்த தரவுகளின் படி மாதாந்தம் சராசரியாக 585,000 (ஐந்து இலட்சத்து என்பத்தைந்தாயிரம் ரூபா) வருமானமாகப்பெறப்படுகின்றது. 

இதுவே வருடத்துக்கு 7,020,000 ரூபா (எழுபது இலட்சத்து இருபதாயிரம்) ஆகின்றது. ஆனால் நாளாந்தம் 30 ரூபாய் படி விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டின் ஊடாகவே 19,500 ரூபாய் வருமானமாகப் பெறப்படுகின்றது என்ற நகரசபையின் தரவுகளின் படி, நாள் ஒன்றுக்கு மேற்படி மலசலகூடங்களுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை 650 ஆக உள்ளது. ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை தரும் அட்டன் நகரில், பஸ் நிலைய மலசலகூடத்தை பாவிப்பவர்கள் வெறும் 650 பேர் தானா என்ற கேள்விகளும் எழுகின்றன.

தனியார் மற்றும் இ.போ.ச தரிப்பிட நிலைய தரவுகளின் படி நாள் ஒன்றுக்குஅட்டன் பிரதான பஸ் நிலையத்திலிருந்து 80 இ.போ. ச பஸ்களும் 200 தனியார் பஸ்களும் மாவட்டத்துக்குள்ளேயும் அதற்கு வெளியேயும் சேவைகளில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணம் செய்வோர் தவிர்த்து, மேற்படி பஸ்களின் சாரதிகள், நடத்துநர்கள், பயணிகளை அனுப்பி வைக்க வருவோர், பஸ் நிலைய வளாகம், அதற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலைய ஊழியர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் ஐயாயிரம் பேர் வரையில் பஸ் நிலைய வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களில் அரைவாசியானோர் வரை மலசல கூடத்தை பாவித்தாலும் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வரை அங்கு வந்து செல்ல வேண்டும் ஆனால் நகரசபையின் வருமான தகவல்களின் அடிப்படையில் அது 650 பேராக உள்ளதை ஆய்வுக்குட்படுத்தல் உரியோரின் பொறுப்பு.

கணக்காய்வு அறிக்கை

இதே வேளை மேற்படி மலசலகூட பராமரிப்பு மற்றும் வருமானம் உட்பட ஏனைய விடயங்கள் குறித்து கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு, நுவரெலியா தேசிய கணக்காய்வு அலுவலகம் மூலம் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கையின் படி நகரசபைக்கு மலசலகூடங்கள் மூலம் நகரசபைக்கு நட்டமா இலாபமா என்ற கேள்விக்கு நட்டம் என்றே பதில் தரப்பட்டுள்ளது.

அதன் படி நகரசபையின் முகாமைத்துவ குழுவினால் நியமிக்கப்பட்ட இருவரினால் பராமரிக்கப்பட்ட மேற்படி மலசல கூடங்களினால் கணக்காய்வு அறிக்கையின் படி 36,23003 ரூபா (முப்பத்தாறு இலட்சத்து இருபத்து மூவாயிரத்து மூன்று) நட்டம் என தகவல் தரப்பட்டுள்ளது.

பழுது பார்ப்புக்கு ஐந்து இலட்சம்

2019 ஆம் ஆண்டில் பஸ் நிலைய பிரதான மலசலகூடத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இருப்புக்கதவுகள், நீர்க்குழாய்கள் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தலுக்கு செலவீனமாக 507,562.84 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் நகரசபை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மலசல கூடங்களை புனரமைப்பதற்கு மத்திய மாகாண சபையால் பத்து இலட்சம் ரூபாவும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜங்க அமைச்சின் மூலம் 9,927,854.31 ரூபாவும் ஒதுக்கப்பட்டாலும் கொவிட் காலமாகையால் ஒப்பந்தக் காரர்கள் எவரும் இப்பணியை மேற்கொள்ள முன்வரவில்லையென தெரிவித்துள்ளது நகரசபை.

இதன் காரணமாக மலசல கூட புனரமைப்புக்கு கிடைக்கவிருந்த சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா நிதி கிடைக்காமலேயே போய்விட்டது. ஆனால் குறித்த நிதியை தக்க வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அப்போதைய நகரசபை நிர்வாகம் மேற்கொண்டதா என்பது குறித்த தேடல்கள் அவசியமாகின்றன.

பணிகள் நிறைவடைந்த பின்னர் பட்டியல்கள் முன்வைக்கப்பட்டு அதன் பிறகே நிதி கிடைக்கக் கூடிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அப்பணம் சபையின் வங்கிக் கணக்கிற்கு கிடைக்கவில்லையென்றும் கொவிட் தொற்று காரணமாகவே அவ் வேலைத்திட்டம் இடம்பெறாத காரணத்தினால் இந்நிதி பயன்படுத்த முடியாமைக்கு சபை பொறுப்பேற்க முடியாது என்றும் பதில் வழங்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அறிக்கைகளின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு மலசலகூட பராமரிப்பு முறையால் சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அட்டன் நகரை மாற்றியமைப்போம் என்ற வாக்குறுதிகளோடு தற்போது தேசிய மக்கள் சக்தியின் புதிய நிர்வாகம் சபையை பொறுப்பேற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஒத்துழைப்பு நல்கியுள்ளது. எனவே இந்த இரண்டு தரப்பினருக்கும் மேற்கூறிய விவகாரத்தில் பொறுப்புள்ளது. புதிய ஆட்சியிலாவது பொது மக்கள் மற்றும் பயணிகள் பாவிக்கத் தக்கவாறு பஸ் தரிப்பிட மலசலகூடம் திருத்தியமைக்கப்படுமா? நகரசபைக்கு நட்டம் ஏற்படாத வண்ணம் பராமரிப்பு முன்னெடுக்கப்படுமா?

Saturday, August 30, 2025

இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்டாரா நடுவர் குமார் தர்மசேன? கொதித்தெழும்பும் இந்திய இரசிகர்கள்


இலண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேன இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இங்கிலாந்து பந்து வீச்சாளர் வீரர் ஜோஸ் டாங் வீசிய 13வது ஓவரின் ஒரு இன்ஸ்விங் யாக்ர்கர் பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டு கீழே விழுந்தார். அதற்கு இங்கிலாந்து வீரர்கள் எல்.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்பை கோரினர். நடுவர் குமார் தர்மசேன ஆட்டமிழப்பு கோரிய ஜோஸ் டாங்கிடம் அப்பந்து துடுப்பில் பட்டு சென்றதாக அதாவது Inside edge என்ற அர்த்தப்படும் வகையில் தனது விரல்களால் சைகை செய்து காட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் மூன்றாம் நடுவரை நாடும் எண்ணத்தை கைவிட்டனர்.பின்பு அப்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை பார்த்த போது குமார் தர்மசேன கூறியது சரியானதாகவே இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு டி.ஆர்.எஸ் முறை ஒன்று மீதமாகியது.

இலண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேன இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் 2–1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. 

இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 2 ஓடடங்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதானமாக விளையாடியராகுல் 14 ஓடடங்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த அணித்தலைவர் சப்மன் கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் வீரர் ஜோஸ் டாங் வீசிய 13வது ஓவரின் ஒரு இன்ஸ்விங் யாக்ர்கர் பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டு கீழே விழுந்தார். அப்பந்து அவரது கால்களில் பட்டுச்சென்றது போன்று இருந்ததால் அதற்கு இங்கிலாந்து வீரர்கள் எல்.டபிள்யூ முறையிலான ஆட்டமிழப்பை கோரினர்.

பொதுவாக அது போன்ற சூழ்நிலையில் நடுவர்கள் ஆட்டமிழைப்பை வழங்குவர் அல்லது அது ஆட்டமிழப்பு இல்லையென தலையசைப்பர். இது இரண்டும் இல்லாவிட்டால் ஒன்றும் செய்யாது அமைதி காப்பார்கள். சர்தேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளுக்கேற்ப டி.ஆர்.எஸ் (Decision Review System) முறையின் கீழ் வீரர்கள் மூன்றாம் நடுவரிடம் ஆட்டமிழப்பு கோரும் 15 வினாடிகள் வரை நடுவர்கள் அமைதியாக இருப்பர்.

ஆனால் நடுவர் குமார் தர்மசேன அது குறித்து யோசிக்காமல் ஆட்டமிழப்பு கோரிய இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஸ் டாங்கிடம் அப்பந்து துடுப்பில் பட்டு சென்றதாக அதாவது Inside edge என்ற அர்த்தப்படும் வகையில் தனது விரல்களால் சைகை செய்து காட்டினார். இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் எவரும் மூன்றாம் நடுவரை நாடும் எண்ணத்தை கைவிட்டனர்.

பின்பு அப்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை பார்த்த போது குமார் தர்மசேன கூறியது சரியானதாகவே இருந்தது. ஜோஸ் வீசிய பந்து சாய் சுதர்சனின் துடுப்பில் பட்டே சென்றுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு டி.ஆர்.எஸ் முறை ஒன்று மீதமாகியது. தர்மசேன அவ்வாறு செய்திருக்காவிடின் இங்கிலாந்து அணியினர் நிச்சயமாக மூன்றாம் நடுவரை நாடியிருப்பர். அவர்களுக்கு ஆட்டமிழப்பு முறை ஒன்று வீணாகியிருக்கும். அணி ஒன்றுக்கு மூன்றாம் நடுவரை கோரும் டி.ஆர்.எஸ்.முறைகள் மூன்று இருக்கின்றன என்பது முக்கிய விடயம்.

இந்த சம்பவத்தை கண்ணுற்ற இந்திய ரசிகர்கள் விதிமுறையை மீறி இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்ட தர்மசேனாவை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள். இதற்கு காரணங்கள் உள்ளன. நான்காவது போட்டியில் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து 3 ரிவியூக்களையும் தவறாக எடுத்து இழந்தது. அதே போல அந்த ரிவ்யூவையும் இங்கிலாந்து இழந்திருக்கும். அதனால் குறைந்தபட்சம் 15 நொடிகள் அமைதியாக இல்லாமல் இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்டதை அவர்கள் விதிமுறையை மீறிய நடுவர் என குற்றஞ்சாட்ட தொடங்கியுள்ளனர்.

தர்மசேனாவின் சைகையால் இங்கிலாந்தின் ஒரு ரிவியூ காப்பாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பாதகமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு நடுவர் தனது முடிவிற்கான காரணத்தை, குறிப்பாக டி.ஆர்.எஸ் வாய்ப்பு இருக்கும்போது, களத்தில் உள்ள வீரர்களுக்கு அதை தெரிவிக்கக் கூடாது. இது ஆட்டத்தின் நியாயமான போக்கைப் பாதிக்கக்கூடும் என்பது பொதுவான கருத்து.

எனினும் தர்மசேனவின் இந்த செய்கை குறித்து அப்போது போட்டி வர்ணணை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர்களும் தமது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். தர்மசேன ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், கூறுகையில் "தர்மசேனா தனது பழைய பழக்கத்தின் காரணமாக இப்படிச் செய்திருக்கலாம். அவர் அம்பயரிங் செய்ய ஆரம்பித்த காலத்தில் டி.ஆர்.எஸ் விதிகள் இல்லை. ஆனால், தற்போதைய சூழலில், நடுவர்கள் தங்கள் மனதில் உள்ளதைச் சைகை மூலம் காட்டக்கூடாது. இது பந்துவீசும் அணிக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கும். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார் .

ஆனால் இங்கிலாந்து வீரர்களோ குமார் தர்மசேனவின் செய்கையைப்பற்றி ஒன்றும் கூறாது இந்திய அணியை கேலி செய்யும் முகமாக கருத்து கூறி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் ஆதர்டன் இது குறித்து கூறுகையில்  இங்கிலாந்து தங்களது ரிவியூக்களை வீணாக்க வேண்டும் என்றுதான் இந்தியா விரும்பும்  என்று வர்ணனையின் போது குறிப்பிட்டார். இது இந்திய இரசிகர்களின் எரிச்சல்களை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இரசிகர்கள் பலரும் தர்மசேனாவின் செயலை விமர்சித்து, இது நடுநிலைமைக்கு எதிரானது என்று பதிவிட்டு வருகின்றனர். இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியின் முதல் நாளிலேயே எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, ஆட்டத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது என்பதும் முக்கிய விடயம். இதே வேளை குமார் தர்மசேனவின் இந்த செய்கை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மீது ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் இந்திய இரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Thursday, August 21, 2025

தொழிலாளர்களை ஏமாற்றுகின்றதா அநுரவின் அரசாங்கம்…?


 தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து ஜனாதிபதித் தேர்தல் அதன் பிறகு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். கம்பனிகளும் உற்பத்தி அதிகரித்தாலே சம்பளத்தை உயர்த்த முடியும் என்கின்றன. தொழிலாளர்களிடம் சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களோ இப்போது தோட்ட மக்களை எட்டியும் பார்ப்பதில்லை. தொழிலாளர்களுக்கு எப்போது சம்பளம் அதிகரிக்கப்படும் என்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் மலையக பிரதிநிதிகள் தமக்குள் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள போதிலும் மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள விவகாரம் பேசும் பொருளாக மாத்திரமே காணப்படுகின்றது. பாராளுமன்றத்திலும், மேடைநிகழ்வுகளிலும் , ஊடக சந்திப்பின் போதும் 1700ருபாய் சம்பளத்தை நிச்சயமாக பெற்றுதருவோம் என்ற கோரிக்கையினை மாத்திரம் தேசிய மக்கள் சக்தியின் மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களோடும் அல்லது முதலாளிமார் சம்மேளனத்துடனும் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்க தரப்பில் எவருமே முன்னெடுத்தது போன்று இதுவரையிலும் தெரியவில்லை. இந்நிலையில். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2000ருபாய் பெற்று கொடுப்பதற்கு தமது அரசாங்கத்தின் ஊடாக நடவடிகை மேற்கொள்ளபடுமென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தார்

பிரதிநிதிகளின் கருத்துகள்

அந்தவகையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ருபாய் சம்பள விடயம் தொடர்பாக அன்மையில் பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறும் போது அவர் மாறுபட்ட கருத்தொன்றை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ருபாய் சம்பள விடயம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் நிச்சயமாக  ஜனாதிபதி ஊடாக தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் கூறியிருந்தார். ‘ 1700 ருபாய் தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வெகுவரைவில் எமது ஜனாதிபதியின் தலைமையில் தீர்வு வழங்கப்படுமென அவர் உறுதியாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

நுவரெலியாவில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இவ்வாறு கூறியிருந்தார்.

‘பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 2,000 ருபாய் வழங்கப்பட வேண்டும். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. ஏனென்றால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான தேவைப்பாடு அவர்களுக்கு உள்ளது. ஆனால் 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குவதில் கூட எமது அரசாங்கம் கடினமான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளது.

முதலாளிமார் சம்மேனத்துடன் பேச்சு வார்த்தைகளை நடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மலையக மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அராசங்கம் வழங்க வேண்டும். ஒரு புறம் வருமான அதிகரிப்பிற்காக சம்பளத்தை பற்றி பேசுகின்ற போது அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பள உயர்வின் ஊடாக மாத்திரம் அவர்களின் வாழ்க்கைத் தரம் அபிவிருத்தியடையாது. தற்போது அதிகமான தோட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அதனால் வருமானம் குறைந்துள்ளது. ஆகவே தோட்டங்களை பராமரிப்பதும் அவசியம் எனத் தெரிவித்தார்.

அசாங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் இவ்வாறு இவ்வாறு இருக்க முதலாளிமார் சம்மேளனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான ரொஷான் ராஜதுரை அண்மையில் அட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

‘ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை 1700ருபாவாக அதிகரிக்க முடியும் ஆனால் தேயிலை உற்பத்தித்திறனை அதிகரித்தால் மாத்திரமே அந்த தொகையினை வழங்குவது சாதியமாகும். கடந்த முறை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் 1350ருபாவை வழங்க இணக்கம் தெரிவித்தோம். எந்த ஒரு நிறுவனங்களிலும் வழங்காத சலுகைகளை நாங்கள் மாத்திரம் வழங்குகிறோம் . தேயிலையின் விலை 2000ருபாவரை அதிகரிக்குமாக இருந்தால் இவர்கள் கோரும் தொகையினை வழங்க முடியும். இன்று சிறுதோட்ட தொழிலளர்களே அதிகமான தேயிலை உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றனர் சில தோட்டங்களின் அண்மையில் தொழிலாளர்கள் மாதம் ஒரு இலட்சத்துக்கு மேலான வேதனத்தை பெற்றிருந்தனர்.

தொழிலாளர்கள் தற்போது தொழிலுக்கு வருவது குறைவடைந்துள்ளது. 1700, 2000, 5000,என்ற தொகைகளை கிடைக்கின்ற இலாபத்தை வைத்து தான் கூறமுடியும். சில பெருந்தோட்ட நிறுவனங்களை போல் ஓய்வுதிய கொடுப்பனவுகளை வழங்காமல் தோட்டங்களை மூடவேண்டிய நிலை ஏற்படும். தற்போது தொழிலாளர்கள் குறைவாக காணப்படுகின்றமையால் அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்கமுடியும். பொறுப்பான பிரதிநிதிகள் என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தரப்பினர் எம்மோடு கலந்துறையாடிய போதே எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினோம்.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் 200ருபாவால் தேயிலையின் விலை குறைவடைந்துள்ளது.நாங்கள் அரசியல் செய்யவில்லை. சிறந்த நிறுவனமொன்றை முன்னெடுத்து செல்லுகின்றோம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இவ்வளவு தொகை தான் வழங்க முடியுமென நாங்கள் அறிவித்துள்ளோம். முடியுமானால் நான் சவால் ஒன்றை முன்வைக்கின்றேன். நாம் ஒரு தோட்டத்தை வழங்குகின்றோம். நாளாந்தம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கும் அளவுக்கு அதை இலாபகரமாக அரசாங்கத்தால் நடத்த முடியுமா? என்று அரசாங்கத்திடமே கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்க பிரதிநிதிகளும் கம்பனிகாரர்களும் இவ்வாறு மாறி மாறி கருத்து பரிமாற்றங்களை முன்னெடுக்கும் அதே வேளை தொழிலாளர்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய தொழிற்சங்கங்களோ அமைதியாக இருக்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைத்திருப்பதால் அது குறித்து பேசுவதற்கு முடியாதுள்ளது. எதிர்க்கட்சியிலுள்ள மலையகக் கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் மாத்திரமே பேசுகின்றனரே ஒழிய தமது தொகுதி பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. யார் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்காமல் வழமை போல அன்றாடம் வேலைக்குச் சென்று தமது வாழ்வாதாரத்துக்காக கொழுந்து பறித்துக்கொண்டிருக்கின்றனர் தொழிலாளர்கள்.

நாளாந்த சம்பளமாக முதற்கட்டமாக 1700 ரூபாயும் அதன் பிறகு 2000 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பி கிட்ணன் செல்வராஜ் கூறினாலும் தற்போது அமுலில் உள்ள நாட்சம்பளமான 1350 ரூபாயே அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது என தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Sunday, August 10, 2025

எம்.பிக்களின் ஓய்வூதிய இரத்து விவகாரம் எதிர்ப்பை சம்பாதிப்பாரா ஜனாதிபதி அநுர ..?



  பாராளுமன்ற அரசியலை விட்டு விலகியிருந்தாலும் முன்னாள் எம்.பிக்களில் பலரும் சொகுசு வாகனங்களில் வலம் வருபவர்களாகவும் செல்வத்தில் மிதப்பவர்களாகவும் உள்ளனர். எனவே மாதாந்தம் 68 ஆயிரம் வரையான ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என இவர்கள் எக்காலத்திலும் கூற மாட்டார்கள். பாராளுமன்றத்தின் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வூதியம் பெறும் அதே வேளை , ஒரு சில அமர்வுகளுக்கு மாத்திரம் தலை காட்டி சென்றவர்கள் ,வாயே திறக்காமல் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கெல்லாம் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு தீர்வையில்லாத அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது முக்கிய விடயம். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம்பில்லியன்களை தாண்டும். ஆனால் முன்னாள் எம்.பிக்கள் சிலர் ஓய்வூதிய இரத்துக்கு மெளனம் காத்தாலும் தற்போது அநுர அரசுக்கு எதிராக செயற்படும் மகிந்த உள்ளிட்ட விமல் ,. உதய கம்மன்பில ஆகியோர் இந்த திட்டத்தை எதிர்த்து கருத்துத் தெரிவித்து வரும் அதே வேளை தமது ஆதரவாளர்களையும் இதற்கு எதிராக தூண்டி விட்டு வருகின்றனர்.


எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானிபடுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியானது இச்சட்டமூலத்தை நிச்சயமாக நிறைவேற்றும். ஆனால் இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் மரணத்தைத் தழுவிய எம்.பிக்களின் விதவை மனைவிகள் உட்பட அவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை அநுர சம்பாதிக்கப்போகின்றார் என பரவலான கருத்துகள் எழுந்துள்ளன. அதே வேளை மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் எம்.பிக்களுக்கு ஏன் ஓய்வூதியம் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏனென்றால் எம்.பிகளுக்கு ஓய்வூதியம் உட்பட வேறு பல சலுகைகள் இருப்பது குறித்து மக்களுக்குத் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் என்பது ஒரு அநாவசியமான செலவு என்பதை உணர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, தாம் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியம் உட்பட அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் ஏனைய சலுகைகளை இல்லாதொழிக்கப்படும் என்று கூறி வந்தது. தற்போது அதை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள முழுமையான வரப்பிரசாதங்களை இன்னும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை தவிர்த்துப் பார்க்கும் போது தமது அதிகாரத்தால் அவர்கள் பெற்று வரும் சலுகைகளை நினைத்துப்பார்க்க முடியாது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் எம்.பிக்கள் மற்றும் அவர்களின் துணைகள் , குடும்ப உறுப்பினர்கள் என சுமார் ஐந்நூறு பேரின் ஓய்வூதியங்களை இரத்து செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது மாத்திரமல்லாது அப்படி நடந்தால் உயிரை மாய்த்துக்கொள்வேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் அநுர அரசாங்கத்தை பயமுறுத்தியவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் நந்தன குணதிலக்க ஆவார். 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவர் நந்தன. அதிக வாக்குகள் பெற்றவர்களில் அவர் மூன்றாமிடத்தைப் பெற்றவர். பின்பு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி சுதந்திர கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த அவர் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ரணிலுக்கு ஆதரவாக பிரசார மேடைகளில் செயற்பட்டதுடன் அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியினரே செயற்பட்டனர் என மேடைகளில் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தேசிய மக்கள் ஆட்சியமைத்தவுடன் அவர்களின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கும் ஒருவராக நந்தன குணதிலக்க விளங்குகின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகளை குறைக்கும் பட்சத்தில் புலம்பெயர் தமிழர்களினால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தமை முக்கிய விடயம்.

இந்நிலையில் ஓய்வூதியம் பற்றி அவர் கூறுகையில் " 68,000 ரூபாய் ஓய்வூதியத்தை வைத்தே நான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வீட்டு வாடகை, பயன்பாட்டுச் செலவுகள் மற்றும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்திய பிறகு, தினசரி உணவு மற்றும் பிற செலவுகளுக்கு ரூ. 700 முதல் ரூ. 800 வரை மட்டுமே எனக்கு மிகுதியாகின்றது’ என அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதியங்களை இல்லாதொழிப்போம் என தேசிய மக்கள் சக்தியானது நாட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை முக்கிய விடயம். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகளின் மற்றும், விதவை மனைவிகளுக்கு (ஹேமா பிரேமதாச மாத்திரமே இதில் அடங்குகின்றார்) வழங்கப்படும் உத்தியோகபூர்வ குடியிருப்புகள், மாதாந்திர கொடுப்பனவுகள், செயலக கொடுப்பனவுகள், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமானது

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி வர்த்தமானிப்படுத்தப்பட்டது. கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் என்பது அவர்களுக்கான அரசியலமைப்பு உரிமை என்பதால் அதை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் அதில் இல்லை. மேற்படி சட்டமூலத்தை எதிர்த்து பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டமூலம் நேரடியாக தமது தலைவரான மகிந்த ராஜபக்சவை இலக்கு வைப்பதாகவுள்ளதாக மொட்டு கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சொந்த வீடுகள் இல்லாத வேறு வருமானங்கள் எதுவுமில்லாத எந்த ஏழை அரசியல்வாதியும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகவில்லை. 1977 ஆம் ஆண்டுக்குப்பிறகு நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெரிவானவர்கள் அனைவருமே மேல் தட்டு வர்க்கத்தினர். அநுரகுமார மாத்திரம் விதிவிலக்கானவராக உள்ளார். ரணசிங்க பிரேமதாசவும் மைத்ரிபால சிறிசேனவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் இருவருமே செல்வந்த நிலையில் இருந்தவர்கள் என்பது முக்கிய விடயம். அனைவருக்குமே சொந்த வீடுகள் அதுவும் பிரமாண்டமாக இருந்தன.

ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு வோர்ட் பிளேசில் பிரீமர் என்ற மாளிகை இருந்தது. ரணசிங்க பிரேமதாசவுக்கு சுசரிதா என்ற பிரமாண்ட வீடு இருந்தது. சந்திரிகா அம்மையார் ரொஸ்மீட் பிளேசில் உள்ள தனது மூதாதையரின் மாளிகை வீட்டை ஹோட்டலாக மாற்றி குத்தகைக்கு கொடுத்து விட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டில் வசித்து வருகின்றார். தான் வசிக்கும் விஜேராம வீட்டை விட தனது அம்பாந்தோட்டை மெதமுலன வலவ்வ சிறந்தது என்று கூறியிருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.

மேலும் மைத்ரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு மிரிஹானவிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொள்ளுப்பிட்டியிலும் சொந்தமான பிரமாண்ட வீடுகள் உள்ளன. எனவே தேசிய மக்கள் சக்தி கொண்டு வந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் உரிமைகள் இரத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் எந்த முன்னாள் ஜனாதிபதிகளும் ‘நாம் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம்’ என்று கூற முடியாது. நந்தன குணதிலக்கவை போன்று நாம் எமது உயிரை மாய்த்துக்கொள்வோம் என பயமுறுத்தவும் முடியாது.

ஆனால் நந்தன குணதிலக்க போன்ற விதிவிலக்கான பல எம்.பிக்கள் இருப்பது அரிதானது. தேசிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது அதில் பணமும் செல்வாக்கும் பிரதான இடத்தை வகிக்கின்றன.

அவர்கள் கட்சிக்காக பல கோடிகளை செலவழிக்கும் ஆதரவாளர்களாகவே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றனர். பாராளுமன்ற அரசியலை விட்டு விலகியிருந்தாலும் அவர்கள் முன்னரைப் போன்றே சொகுசு வாகனங்களில் வலம் வருபவர்களாகவும் செல்வத்தில் மிதப்பவர்களாகவும் உள்ளனர். எனவே மாதாந்தம் 68 ஆயிரம் வரையான ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வோம் என இவர்கள் எக்காலத்திலும் கூற மாட்டார்கள். பாராளுமன்றத்தின் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஓய்வூதியம் பெறும் அதே வேளை , ஒரு சில அமர்வுகளுக்கு மாத்திரம் தலை காட்டி சென்றவர்கள் , வாயே திறக்காமல் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்கெல்லாம் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு தீர்வையில்லாத அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது முக்கிய விடயம்.

இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் பில்லியன்களை தாண்டும். அநுர அரசாங்கத்தின் இந்த நகர்வுகளை மத்திய தர மற்றும் கீழ்த் தட்டு மக்கள் வரவேற்றுள்ளனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அதே வேளை மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் வரப்பிரசாதங்களை அனுபவித்தனர், இன்னும் எவ்வாறு அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் போன்ற விடயங்களையும் இந்த அரசாங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டு மக்களில் கணிசமானோர் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதாகவே தெரிகின்றது. அவர்களின்  மெளனம் இதை வலியுறுத்துகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கு சிலஅரசியல்வாதிகள் , நாட்டுக்காகவும் தமது தொகுதி மக்களுக்காகவும் என்ன தான் செய்தார்கள் என்ற கேள்விகளும் அவர்கள் மனதில் எழுந்திருக்கக் கூடும்.  

ஓய்வூதியம் பெறும் அனைத்து முன்னாள் எம்.பிக்களும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். சிலர் இன்னும் ஏதாவதொரு தொழிலில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.  அவர்களின் நிலைமைகள் பரிதாபகரமானவை.இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேறு வழியில் ஏதாவது சிறப்பு சலுகைகளை வழங்க முடியுமா என அரசாங்கம் ஆராய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.